Thursday, August 31, 2006

செ.அரங்கரின் தமாஷ் பேட்டி !

அ.தி.மு.க விலிருந்து சமீபத்தில் வெளியேறி இருக்கும் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் ஜூ.வி க்கு பேட்டி அளித்துள்ளார்.

1. கட்சியை விட்டு வந்தீர்கள் சரி... மதம், ஆன்மிகம் என்று சொல்லி திராவிட இயக்கத்தின் அடிப்படையையே சந்தேகப்பட வைத்திருக்கிறீர்களே ...?

பதில்: சந்தேகமும் இல்லை. குழப்பமும் இல்லை. இந்தப் பத்தாண்டுகளில் எனக்குப் பல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில விஷயங்களை, பிரச்சினைகளை ஆழமாகக் கவனித்தால், மதத்தின் அவசியமும், ஆன்மிகத்தின் அற்புதமும் புரிகிறது (இப்போதாவது புரிந்து கொண்டாரே !!!!)

பெரியாரே நாத்திகர் அல்ல என்பது என் கருத்து.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும், OK யா ;-))

அவர் முழு நாத்திகராக இருந்தால், முகமது நபியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார். அரிஜன மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிப் போராடி இருக்கவும் மாட்டார்.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப சத்தமா சிரிக்கணும், OK யா ;-)) இட்லிவடை மாதிரி, உங்களையெல்லாம் சிரிக்கக்கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேன் :)))

ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு சொல்லி கோயில்களை நிர்வகித்ததைத் தான் அவர் எதிர்த்தார்
(இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தானே !)

2. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், ஆன்மிகமா, அரசியலா ?

பதில்: ஆன்மிகத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவேன். அரசியலிலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது (?!).
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப அழ ஆரம்பிக்கணும், OK வா ;-))

ஆனால், எங்கிருந்து அதைச் செய்வது என்று முடிவு செய்யவில்லை
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப பேய் முழி பெருமுழி முழிக்கணும், OK வா ;-))

பேட்டி இனிதே முடிவடைந்தது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஜுனியர் விகடன்

Tuesday, August 29, 2006

திவ்ய தேச தரிசனம் 1 - திருக்கோழி (உறையூர்)

மஹாவிஷ்ணுவுக்கு உலகெங்கும் பல கோயில்கள் இருந்தாலும், திராவிட வேதம் என்றழைக்கப்படுகிற, பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும் திருக்கோயில்கள் மொத்தம் 108 ஆகும். இவற்றில் 105 கோயில்கள், இந்திய துணைக்கண்டத்திலும், 1 (சாளக்கிராமம்) நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டும் விஷ்ணுவின் விண்ணுலக உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.

இவை வைணவத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பூவுலகில் உள்ள 106 புனிதத்தலங்களில், 40 முந்தைய சோழ நாட்டிலும், 2 நடு நாட்டிலும் (கடலூர் அருகில்), 22 தொண்டை நாட்டிலும், 11 வட நாட்டிலும் (ஆந்திரா, உ.பி, குஜராத், நேபாளம்), 13 மலை நாட்டிலும் (கேரளம்), 18 பாண்டி நாட்டிலும் அமைந்துள்ளன. திவ்ய தேசங்கள் சிலவற்றில்(60) நின்ற திருக்கோலத்தோடும், சிலவற்றில்(27) கிடந்த திருக்கோலத்தோடும், சிலவற்றில்(21) வீற்றிருந்த திருக்கோலத்தோடும் மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.

ஆழ்வார் என்ற சொல் 'இறையனுபவத்தில் திளைப்பவர்' என்பதை குறிக்கும். வைணவத்தில் பன்னிருவர், ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 5 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவர்கள் தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணித்தும், இறையன்பைத் தேக்கிய மிக அழகான, தத்துவார்த்தமான பாசுரங்களை இயற்றியும், பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, மதச்சூழல் புதுப்பொலிவு பெறுவதற்கு காரணமாயினர் என்றால் அது மிகையில்லை. மிக முக்கியமாக, ஆழ்வார் பாசுரங்களில் சொல்லப்பட்டவை சாதி, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவை, வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பையும் பூரண சரணாகதி தத்துவத்தையும் பறைசாற்றுபவை ! ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் ஆழ்வார்களே தலையானவர்கள் எனலாம். பல காலகட்டங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் பாடல்களை தேடி எடுத்து அதை நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற தொகுப்பாக்கி, இசைப்படுத்திய பெருமை நாதமுனி என்ற பெருமகனாரைச் சாரும். இதற்காக, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டவர் அவர் !

சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ திவ்ய தேசங்களை குறித்து ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணம். தொடரின் முதல் பதிவு இது. முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். தேசிகனும் பல சமயங்களில் ஸ்ரீரங்கம் குறித்து தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். எனவே, திருக்கோழி என்ற திருவுறையூர் கோயில் பற்றிய பதிவோடு இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.


*****************************
இக்கோயில், திருச்சியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது. இத்தலம், நிஷ¤லபுரி, ஊர்சடை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் நாயகர் அழகிய மணவாளன் எனப்படுகிறார், நின்ற திருக்கோலத்தில், கைகளில் சங்கு/ பிரயோக சக்கரம் தாங்கி அருள் பாலிக்கிறார். வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், கமலவல்லி நாச்சியார் மற்றும் வாசவல்லி என்று அறியப்படுகிறார். திருமங்கையாழ்வாரும் (பாசுரம் 1762), குலசேகர ஆழ்வாரும் (பாசுரம் 662) இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) கல்யாண விமானம் மற்றும் கல்யாண தீர்த்தம் எனப்படுகின்றன. திருப்பாணாழ்வார் இங்கு தான் அவதரித்தார். அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், அவர் திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது !
*****************************

அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களை கீழே தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.

பதவுரை:
என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


பதவுரை:
ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


பதவுரை:
கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!


***************************
இக்கோயிலின் (திருக்கோழி அல்லது மூக்கேஸ்வரம்) பெயர்க் காரணம் , ஒரு தைரியமான கோழி வலிமை பொருந்திய ஒரு யானையை தன் அலகால் கொத்தி விரட்டியடித்ததாகக் கூறப்படும் ஒரு பழங்கதையுடன் தொடர்புடையது. உறையூர் பண்டைய சோழர் தலைநகரமாக விளங்கியது. இக்கோயிலை கட்டியவர் நந்த சோழன் என்றும், அரசனின் மகளாக அவதரித்த மஹாலஷ்மி ரங்கநாதரை மணந்ததாகவும், அந்த வைபவத்தை கொண்டாடும் விதமாக அரசன் இக்கோயிலை கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. கோயிலுள் நுழைந்தவுடன் காணப்படும் பெரிய மண்டபத்து தூண்களில் மிக அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களுக்கும், வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. திருப்பாணாழ்வாருக்கு, தனியாக ஒரு சன்னதி திருக்குளத்தின் வடப்புறம் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான வாயில் வடக்கு (ஸ்ரீரங்கம்) நோக்கியுள்ளது.


பங்குனி மாத உத்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்திலிருந்து உத்சவ மூர்த்தியான நம்பெருமாள் (உறையூரில் மூலவர் மட்டுமே இருக்கிறார்) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்குனி பூரத்தின் போது, கல்யாண உத்சவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் உத்சவம் கார்த்திகையில் நடைபெறுகிறது.

****************************

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 27, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 9 - No Gimmicks

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************
1. நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம்

2. ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

3. இமைப் பறவைகள் சிறகுகள் விரிக்கும்

4. ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட, இங்கே நான் காத்திருக்க

5. மரக்கிளையில் ஒரு குருவி கூடு கட்டி வாழ்ந்ததே

6. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால்

7. நெஞ்சுலே நெருப்பை வச்சா நீரும் அணைக்க முடியுமா

8. நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை

9. எல்லார்க்கும் தல மேலே எழுத்தொண்ணு உண்டு, என்னான்னு யார் சொல்லக் கூடும்

10. மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

11. கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா, பொண்ணு மனசை தொட்டு பறிச்சா...

12. இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் இரவும் பௌர்ணமி ஆகும்
*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 26, 2006

Maran vs Yechury

தொலைத்தொடர்புத் துறையின் விரிவாக்கத் திட்டங்கள் தாமதப்படுவது தொடர்பாக, வியாழக்கிழமை அன்று, ராஜ்யசபையில், அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், CPI(M) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது ! அப்போது மன்மோகன்சிங்கும் அவையில் இருந்தார்.

தனியார் சேவையை ஒப்பிட்டு, BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் உருப்படியில்லாத சேவை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது கவன ஈர்ப்பு எடுத்து வந்த போது, யெச்சூரி, தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக, BSNL/MTNL நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான டவர்கள் நிறுவும் பணி வேண்டுமென்றே (deliberately) நடைபெறாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார் !

துள்ளியெழுந்த அமைச்சர், அத்தகவல் தவறு என்றும், யெச்சூரியின் பேச்சு அரசுப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் பதிலுரைத்தார் ! யெச்சூரி, தான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், தாங்கள் தான் தொலைத் தொடர்பு யூனியன்களை நடத்துவதாகவும், தான் கேட்டது, சில யூனியன்கள் தன்னிடம் முன் வைத்த புகாரை வைத்து தான் என்றும் கூறினார்.

திரு.மாறன் யெச்சூரி தான் கூறியதை எழுத்து வடிவில் (!) தர இயலுமா என்றும், தான் (மாறன்) பேசியதை யெச்சூரி காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சூடாகப் பேசினார் என்று தெரிகிறது. கடுப்பான யெச்சூரி, கேள்வி நேரம் முழுவதும் தான் அவையில் இருந்து கவனித்ததாகவும், அமைச்சரின் இத்தகைய மரியாதைக் குறைவான போக்கு சரியில்லை என்றார் !! உடன் இருந்த பிருந்தா கரத், " என்ன இது ? அமைச்சர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார் ?" என்று கூறினார் !!!

இந்த ரகளைக்குப் பின் யூனியன்கள் யெச்சூரிக்கு அளித்த தகவல்களை, தனக்குத் தெரியப்படுத்தினால், தான் அவை குறித்து விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று யெச்சூரிக்கு அமைச்சர் கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன், டாடாவை (யே!) மிரட்டினார் என்று ஒரு பிரச்சினை ! இப்போது இது ! நல்ல வேளை, யெச்சூரியை 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைக்காமல் விட்டாரே ;-) யெச்சூரி வைகோ அல்லர் ! CPI(M)யை ஓவராக வெறுப்பேற்றினால், மத்திய அரசு கவிழும் அபாயம் உள்ளது ! அதனால், தாத்தா வாங்கித் தந்த அமைச்சர் பதவியும் பறி போகும் ! அப்படி, மத்தியில் ஆட்சி கலைய திமுக அமைச்சர் ஒருவர் காரணமாகி விட்டால், கலைஞர் அரசுக்கும் ஆபத்து தானே ! இன்னொரு தேர்தல் (அதற்கான பெரும் செலவு!) தற்போது நிச்சயம் தேவையற்ற ஒன்று தானே !

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் II - பதிவு 9


***********************
பல்லவியும் சரணமும் பதிவுக்காக, பழைய பாட்டுக்களுக்கான பல்லவிகளுக்காகவும் அவற்றுக்கான சரியான சரணங்களுக்காகவும் என் ஞாபகங்களை அலசிக் கொண்டிருந்தபோது, தூக்கக் கலக்கமாய் இருந்ததால், நல்ல பல்லவிகள் நினைவுக்கு வந்தாலும், சரணங்கள் சட்டென்று பிடிபடாம்ல போயின. நல்ல சரணங்கள் நினைவுக்கு வந்தும், அவற்றுக்கான பல்லவிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன. "என்னடா வம்பாப் போச்சு" என்று அலுத்துக் கொண்டபோது, பளிச்சென்று நினைவில் தோன்றிய பல்லவியும் சரணமும், உங்கள் பார்வைக்கு ;-))
************************
இதோ அந்த பல்லவி !





இதோ சரணம் !

மயில்நட மிடுவாய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! ...

கோபப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 24, 2006

கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு !

கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய Dr.ராமதாஸ், வீரப்ப மொய்லி பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தும், இடஒதுக்கீட்டில் அவரது நிலைப்பாடு பிற்பட்டவருக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அவர் தமிழ்நாட்டுக்கு இனி வருகை தரும்போது அவருக்கு எதிராக பாமக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் கூறினார். சிறிது காலத்திற்கு முன் கறுப்பு பெயிண்ட் பூசி கலாட்டா, இப்ப கறுப்புக்கொடி ! வீரப்ப மொய்லிக்கு கறுப்புக் கொடி காட்டினால், தமிழக காங்கிரஸ்காரர்கள் சும்மா இருப்பார்களா என்று பார்க்க வேண்டும் !

மேலும், வீரப்ப மொய்லி க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து தள்ளி வைக்க முயன்றதாகவும், அன்னை சோனியாவின் தலையீட்டால் தான், க்ரீமி லேயரின் தலை தப்பியது என்ற தகவலையும் ஐயா அளித்தார். க்ரீமி லேயர் க்ரீமி லேயரை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே !!! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடஒதுக்கீட்டு விவாதத்தின்போது எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது, தமிழக மக்களுக்கு அவர் இழைத்த துரோகம் என்று ராமதாஸ் கூறினார். ஐயா ஏதோ முடிவில தான் இருக்கார் போல இருக்கு ! ஒரு கூட்டணிக் கட்சியின் அமைச்சராகிய சிதம்பரத்திடம் இது குறித்து பேசித் தெளிவதற்கு முன், இவ்வாறு ராமதாஸ் பேசியிருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

அடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாக ஒரு வெடி வைத்தார் ! பா.ம.கவைத் தவிர, மற்ற கட்சிகள் 'கூட்டணி தர்மத்தை' கடைபிடிக்காததால் தான், பாமக கிட்டத்தட்ட 13 இடங்களில் தேர்தலில் தோற்றது என்றும், முக்கியமாக விருத்தாசலம் (கேப்டனை இனிமேல் யாரும் அங்கே அசைக்க முடியாது போலத் தெரிகிறது!) மற்றும் புவனகிரி ஆகிய பாமக கோட்டைகளில் தன் கட்சி தோற்றது என்றும் கூறினார். மேலும் திமுக வேட்பாளர்களான ஆதிசங்கரும், வெங்கடபதியும், பாமகவின் ஆதரவால், அவர்கள் வன்னியராக இல்லாத போதும் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக (இதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!!!) கூறினார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விரிசலுக்கான ஆரம்ப அறிகுறிகள், இவ்வளவு சீக்கரமாகவா ??? மக்கள் வரிப்பணத்தை விரயம் பண்ணி இன்னொரு தேர்தல் தேவையா ? கஷ்டமோ, நஷ்டமோ, அட்ஜஸ்ட் பண்ணி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையா இருந்தா நல்லது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, August 23, 2006

மனதை பதற வைக்கும் ஒரு துயரம்

எவ்வளவு பேர் இது குறித்த செய்தியை வாசித்தீர்கள் என்று தெரியவில்லை ? சமீபத்தில் ராஜஸ்தானில் நிகழ்ந்த மழை வெள்ளப் பெருக்கில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் சிக்கித் தவித்து, உயிருக்குப் போராடி, பின்னர் ஒருவர் பின் ஒருவராக, கரையில் நின்றபடி ·பால்னா என்ற ஊரின் மொத்த மக்களும் அரசு இயந்திரமும் பார்த்துக் கொண்டிருக்க, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி, அவர்கள் கதறியும், வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு அஞ்சி, ஒருவரும் முன் வரவில்லை. வேடிக்கை பார்த்தவர்களில், ராஜஸ்தான் அமைச்சர் லஷ்மி நாராயண் தேவும் ஒருவர் !

அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரு இந்திய ராணுவ வீரர்கள் தைரியமாக வெள்ளத்தில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஒரு வீரர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இன்னொருவர் தண்ணீர் வடிந்த பின் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மேலே சொன்ன ஐவர், ஒரு பாலத்தை கடப்பதற்காக, காரில் சென்றபோது, காரி நதியின் வெள்ளப்பெருக்கில் சிக்கினர் என்று தெரிகிறது. கார் பாலத்தின் மேல் சென்றபோது, சில நொடிகளில், மூழ்கி விட்டது. காரின் மேல் கூரையில் ஏறிய ஐவரும் உதவிக்காக கூக்குரலிட்டனர். ஒரு மணி நேரத்தில் வந்த போலீசார், மீட்பதற்கு வேண்டிய உபகரணங்கள் எதையும் எடுத்து வரவில்லை என்பது பெரிய கொடுமை. அரசு அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வந்து, என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர். வெள்ளப்பெருக்கின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், நீரில் குதிப்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை.

மக்களில் சிலர் சிக்கியிருந்தவரை நோக்கி கயிற்றை வீசினர். நதியின் அகலம் கிட்டத்தட்ட 200 அடி இருந்ததால், அதுவும் பயனில்லாமல் போயிற்று. வெள்ள நீரின் மட்டம் உயர உயர, அந்த ஐவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி, கரையில் இருந்த மக்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மக்களில் சிலர், பல பிளாஸ்டிக் குழாய்களை ஒன்றாக இணைத்து அவர்களை மீட்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. படை சூழ வந்த அமைச்சரும் கையை பிசைந்தபடி இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம், ஐவரில் ஒரு வாலிபர் தடுமாறி நீரில் விழுந்து மறைந்தார். மகனை மீட்க அவன் பின்னே குதித்த அவனது தந்தையும் மூழ்கினார். மற்ற மூவரும், மனதை உருக்கும் கூப்பாடுகளுக்கிடையில், ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! இறை தரிசனத்துக்காக பயணப்பட்டவர்களை, எமன் கூட்டிச் சென்றது என்ன ஒரு அநியாயம் பாருங்கள் !

ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர், விமானப்படையை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டரை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேக மூட்டத்தினால், ஹெலிகாப்டர் வருவது தடைபட்டு விட்டதாம். ஜோத்பூரிலிருந்து ஒரு ராணுவ அணி அனுப்பப்பட்டதாகவும், அதுவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சம்பவ இடத்திற்கு வர இயலாமற் போனதாகவும் தெரிகிறது.

இவையெல்லாம் வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது. இதே ஒரு அரசியல்வாதியோ அவரின் நெருங்கிய உறவினரோ இவ்வாறு சிக்கிக் கொண்டிருந்தால், அரசு காப்பாற்ற பெரு முயற்சி எடுத்திருக்கும். எட்டு மணி நேரத்தில், எதுவும் செய்ய இயலவில்லை என்பதை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை ! என்ன தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு என்ன பயன் ? 480 நிமிடங்கள் இருந்தும், ஐந்து உயிர்களை காப்பாற்ற ஒரு இழவும் செய்ய இயலா ஒரு சூழலில் !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 22, 2006

+/- குத்து, பின்னூட்டம், பதிவுத்தலைப்பு - Jolly Tips

************************
தமிழ்மணம் '+/-' ரேட்டிங் வசதியை வழங்கியது, பதிவர்கள் வாசிக்கத்தக்க பதிவுகளை பரிந்துரைப்பதற்காக என்பது என் எண்ணம். ஆனால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ? தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் உடைய பதிவுகளுக்கு '-' போட்டு, அப்பதிவுகள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் பட்டியலில் வராமல் பார்த்துக் கொள்வதில் போய் முடிகிறது !!! பதிவரின் கருத்துக்கள் விவாதத்திற்குரியவை என்றால், தங்களது எதிர்கருத்துக்களை பின்னூட்டமாக இடலாமே ! ஜனநாயகத்தில் விவாதம் அவசியமானது இல்லையா ? அதை விடுத்து "-" போட்டுத் தாக்குவது சரியில்லை.

தனிமனிதத் தாக்குதல் / வசைகள் / அருவருக்கத்தக்க கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு, வாசகர் கண்டிப்பாக '-' இட்டு, கண்டனத்தை தெரிவித்தால் நல்லது. அத்தகைய பதிவுகளை பின்னுட்டமிடாமல் நிராகரித்தாலே போதும். பதிவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் ! ஊக்கமளிப்பதால் தான் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.

புதிதாக வரும் பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களைஊக்குவிக்கலாம். அவர்கள் மேலும் சிறப்பாக எழுத அது உதவும்.

சீரியஸ் மேட்டர் முடிந்தது, இப்ப கொஞ்சம் ஜாலியா சில கருத்துக்கள் :)

1. ஒரு பதிவை படிச்சுட்டு, ஒண்ணுமே தோணலன்னா, பதிவை மறுபடியும் வாசியுங்கள், ஏதாவது உள்குத்து இருந்தா புரிய வாய்ப்பிருக்கு ! பதிவின் தலைப்பை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் ! அப்படியும் புரியலன்னா, நீங்க ஒரு வெண்குழல் விளக்கு தான் :) அல்லது வலைப்பதிவுலகம் பற்றி சரியா இன்னும் தெளியலேன்னு அர்த்தம் ! தெரிந்தோ தெரியாமலோ, சக வலைப்பதிவர் ஏதாவது சொல்லி ஏடாகூடமாக மாட்டினார்னா, உடனே அவரை "இது நியாயமா, தர்மமா, அடுக்குமா?" என்று கேள்வி கேட்டு ஒரு பதிவு போடுங்கள் ! உடனே, பதிவைச் சுத்தி கூட்டம் அம்மும் :) இது தான், இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட் ;-)

2. உங்களோட கூட்டாளியோட பதிவாயிருந்தால், "சூப்பர் மாமூ" அல்லது "கலக்கிட்டியே சந்துரு" என்று போட்டு கீழே "நமீதா ரசிகர் மன்றம்" அல்லது "சிம்ரன் ஆப்பக்கடை, துபாய்" (பதிவுக்கு சம்பந்தமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை!) என்று குறிப்பிடுங்கள்.அலம்பல் செய்வதற்கென்றே அலைந்து கொண்டிருக்கும் அனானிக் கூட்டம் will take over :) "நீ உருப்பட மாட்டே", "நீ மட்டும் உருப்படுவியா?", "நான் உருப்பட்டாலும், நீ உருப்படவே மாட்டே", என்று பலவிதமான பெயர்களில் (தலையெழுத்துப் பிழை, சனீஸ்வர குய்ராலா, நாதாரி, கபோதி, சொர்ணமால்யா, புலிகேசி ....) அனானிகள் தொடர்ந்து பின்னூட்டி, உங்கள் பதிவு, "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் டாப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வர் ;-)

3. பதிவின் தலைப்பில், வள்வள், கழிவு, கேவலம், ஜொள்ளு, கருப்பு, பாப்பான், போலி, டோண்டு போன்ற சொற்கள் இருந்தா, வாசகரை சும்மா காந்தம் மாதிரி பதிவு பக்கம் இழுக்கலாம் ;-) நெறய பின்னூட்டங்களும் கிடைக்கும், பிளாக் கவுண்டர் (Blog counter) வச்சிருந்தா பிச்சுக்கிட்டு ஓடும்
!!!

4. பின்னூட்டக் கயமைத்தனம் நெறய செய்யுங்கள் : அதான், 'நன்றி', 'மறுபடியும் நன்றி', 'ஆ, சொல்ல மறந்துருச்சு', 'வாங்க, வாங்க' போன்றவை !!! ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தனித்தனியா (டைம் கேப் விட்டு) நன்றி சொல்லுங்க ! அதே மாதிரி, டைம் கேப் விட்டு, உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை ஒவ்வொண்ணா பப்ளிஷ் பண்ணனும், புரியுதா ??? அப்ப தான், மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் பகுதியை நீங்க ஆதிக்கம் பண்ணலாம் ;-)

5. நடுநிலையோடு ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் ஆய்ந்து, மறந்தும் கூட ஒரு பதிவு போட்டு விடாதீர்கள். அதே போல், எதிராளி சொல்வதில் ஏதாவது சங்கதி உள்ளதா என்றெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்யாதீங்க ! Chances are, உங்களை யாரும் சீந்த மாட்டார்கள் !!! ஒரு பக்கத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது தான் உங்களுக்கு celebrity status தரும் ;-)

6. மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)

இந்த பதிவுக்கு, + அல்லது -, ஏதோ ஒண்ணு குத்துங்க, ஒங்க இஷ்டப்படி :)
என்ன, ஜோதியிலே ஐக்கியமாகத் தான் இந்த பதிவே :)

என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************

Monday, August 21, 2006

இடஒதுக்கீடு அமல் - 2

பார்க்க:
"இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி"

********************
சிறிது நேரத்திற்கு முன் இடஒதுக்கீடு குறித்து ND TV-யில் Flash செய்திகள் பார்த்தேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.

*********************
1. 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் குழு (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது

2. வீரப்ப மொய்லி CNN-IBN பேட்டியில் கூறியது போல, இடஒதுக்கீடு பல கட்டங்களில் (in phases) நிறைவேற்றப்படுகிறது

3. க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது

4. முதல் கட்டத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

5. ஆகஸ்டு 25ஆம் தேதி, இடஒதுக்கீட்டிற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

********************

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 20, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 8

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. அட நான் சொல்வது உண்மை அதை நம்பினால் நன்மை

2. தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே

3. செவந்த முகம் கண்டு என் மனசு பதறுது

4. நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது

5. தப்புக் கணக்கை நாளும் படிச்சேன்

6. வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை

7. காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

8. சுகமான உன் மேனி பாடல்

9. கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்

10. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை

11. சிலையாக நாம் நிற்பதே அற்புதம் ...

12. பலப்பல ஜென்மம் நான் எடுப்பேன், பாடல்கள் கோடி ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 17, 2006

இஸ்ரேல் vs ஹெஸ்பொல்லா

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே நடந்து வந்த சண்டை ஓய்ந்து, UN தலையீட்டாலும் (US அனுமதித்ததாலும்!) தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து ஒரு பார்வை.

முதலில், இரண்டு ராணுவ வீரர்களை மீட்பதற்காக ஒரு நாடு போர் தொடுப்பது என்பது சற்று அதிகமானது ! மேலும், போரின் முடிவில் இஸ்ரேல் அவர்களை மீட்க முடிந்ததா என்பது தெரியவில்லை ! ஹெஸ்பொல்லாவினால் இஸ்ரேலுக்கு எந்தவித ஆபத்தும் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கூறிக் கொண்டு, இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகள், பல அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பலி கொண்டது அமைதி விரும்பும் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இதற்கு முன் இஸ்ரேல் நிகழ்த்திய போர்களூக்கு ஓரளவு நியாயமான காரணங்கள் இருந்தன. இப்போது நிச்சயம் கிடையாது ! எப்போதும் போல அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து அதில் குளிர் காய்ந்தது. எதேச்சாதிகார புஷ், எதிர்பார்த்தது போலவே, "இது அமைதிக்காக நடத்தப்படும் யுத்தம்" என்று இப்போரை வர்ணித்தார் ! இராக்கில் தங்களால் முழுமையாக செய்ய முடியாததை, லெபனானில் இஸ்ரேலாவது செய்யட்டுமே என்ற அமெரிக்க "நல்லெண்ணமும்" இதற்குக் காரணம் !

நமது இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போர் பற்றிய செய்திகளை பொதுவாக புறக்கணித்ததாகவே தோன்றியது. "Breaking News" என்று போட்டு கவைக்குதவாத செய்திகளை மக்களுக்கு வழங்குவதே இவற்றின் தலையாய பணிகளில் ஒன்று ! செய்திகள் குறித்த ஆய்வு (Analysis) எனபது நடைபெறுவதில்லை. நாமும், கொட்டக் கொட்ட அவற்றைப் பார்க்கிறோம் !

ஹெஸ்பொல்லா நிகழ்த்திய ராக்கெட் தாக்குதல்களில், இஸ்ரேலின் வடக்குப்பகுதியான ஹை·பாவில் பொதுமக்கள் பலியாயினர். இஸ்ரேலுக்கும் இழப்பு தான் என்றாலும், இப்போரினால், இப்போது தான் பொருளாதார நிலை சற்றே சீரடைந்து வரும் லெபனானுக்கு, இழப்பு பலப்பல மடங்கு என்றே கூற வேண்டும். லெபனானின் பன்னாட்டு விமான நிலையம், பெட்ரோலிய ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல இடங்கள் குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டன.

தம் மக்களுக்கு ஏற்படக்கூடிய அவல நிலையையும், உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டாவது, ஹெஸ்பொல்லா சற்று முன்னதாகவே பேச்சு வார்த்தைக்கு வந்திருக்க வேண்டும். ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், அதி நவீன தொழில்நுட்பத் தடவாடங்களின் துணையுடன் வரும் இஸ்ரேலை, ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகள் கொண்டு எத்ர்த்துப் போரிட்டதால், லெபனானுக்கும், அதன் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளும், வலியும், மிக மிக அதிகம் ! ஆனால், தீவிரவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது ! மேலும், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவருமே அப்பாவி மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசியல் செய்பவர்கள் தானே !!!

போர் தொடங்குவதற்கு முன், ஹெஸ்பொல்லாவிடம் இருக்கும் ராணுவத் தளவாடங்களை பறிமுதல் செய்யும்படி, லெபனான் நாட்டு ராணுவத்தை இஸ்ரேல் வலியுறுத்தியது உண்மை தான். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத நிலையில் லெபனான் ராணுவம் இருந்தது / இருக்கிறது என்பதும் உண்மையே ! இஸ்ரேலியத் தாகுதல்களால், லெபனானில், ஹெஸ்பொல்லா எதிர்ப்பாளர்கள் கூட பெருமளவு ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் அரசு தற்போது பலமிழந்து, ஹெஸ்பொல்லா இயக்கம் இன்னும் ஆழமாக வேரூன்றுவதற்கு இப்போர் வழி செய்ததுடன், நிரந்தமான நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படக் கூடிய சூழலை பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளி விட்டது ! மிக நிச்சயமாக, இப்போர் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தரவில்லை ! இதனால் ஏற்படவிருக்கும் பாதகங்கள் தான் அதிகம் !

போர் உச்சத்தில் இருந்தபோது, கோண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) இப்பிரச்சினையை, "ஒரு புது மத்திய கிழக்கு பிறக்கும் சமயம் ஏற்படும் பிரசவ வலி" என்று வர்ணித்தார் ! ஆனால், இந்த "புது மத்திய கிழக்கு" (இராக் போலவே!) அமெரிக்க நலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வல்லதாகவே தோன்றுகிறது !

பி.கு: ராக்கெட் மழை பொழிந்த ஹை·பாவுக்கு (Haifa) 2 ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது சாதா மழை தான் பெய்தது ! கடல் மட்டத்திலிருந்து 5000 அடிக்கு மேல் அமைந்த மலைப்பாங்கான, குளிர்ச்சியான, ரம்யமான ஊர் அது. பஹாயி (Bahaii) சமயத்தின் தலைமையிடமாகவும், பஹாயினரால் புனித பூமியாகவும் ஹை·பா கருதப்படுகிறது. அங்கே, என்னுடன் மிகுந்த நட்புடன் பழகிய இஸ்ரேலிய நண்பர்களும் அவர்களின் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 15, 2006

சிதம்பரத் தீர்ப்பும் குட்டிக் கதையும்

சிதம்பரம் கோயிலில் திருச்சிற்றம்பலத்தில் ஆறுமுகச்சாமி "தமிழில்" சைவ திருப்பாடல்கள் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து நண்பர் ஒருவரின் பதிவு அளித்த ஊக்கத்தின் விளைவே இக்குட்டிக்கதைப் பதிவு !

ஒரு மாணவன் தேர்வுக்கு வேண்டி, பசுமாடு பற்றி விளக்கமாக இவ்வாறாகப் படித்தான்,

1. பசுவிற்காக மற்றொரு தமிழ்ச்சொல் 'ஆ'

2. பசு புல், வைக்கோல் போன்றவற்றை உண்டு மனிதர்களுக்கு இன்றியமையாத உணவாகிய பாலைத் தருகிறது.

3. பசு நான்கு கால்களும், இரண்டு கொம்புகளும் உடையது, சாதுவான பிராணியும் கூட !

4. பசுவின் பாலிலிருந்து உருவாகும் நெய், தயிர் போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் தருபவையாகவும் உள்ளன.

5. பசுவை இந்துக்கள் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

6. அதனால், பொதுவாக, இந்துக்கள் பசு மாட்டிறைச்சியை உண்பதில்லை

7. புதுமனை புகுவிழாவிற்கு பசு கூட்டி வரப்பட்டு அதற்கு பூசை செய்யப்படுகிறது.

இப்படியாக, பசுவைப் பற்றிய (பலர் அறிந்த, அறியாத!) பலப்பல விஷயங்களை நெட்டுரு போட்டு விட்டு, தேர்வுக்குச் சென்ற அம்மாணவனுக்கு பெரிய அதிர்ச்சி ! கேள்வித் தாளில் தென்னை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது ! சற்றே யோசித்த அந்த 'புத்திசாலி' மாணவன், கிடுகிடுவென்று பசுவைப் பற்றி தான் படித்து வைத்திருந்ததை ஒன்று விடாமல் எழுதி விட்டு, முத்தாய்ப்பாக, "அத்தகைய சிறப்புகளை பெற்ற பசுவானது, அழகான தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது!" என்று கட்டுரையை நிறைவு செய்தான் !

ஆக, பசுவைப் பற்றி தனக்குத் தெரிந்ததை எழுதிய மாதிரியும் ஆயிற்று, தென்னையைப் பற்றிய கட்டுரை எழுதிய திருப்தியும் ஏற்பட்டது அம்மாணவனுக்கு !!! மாணவனின் சமயோஜிதத்தையும், கெட்டிக்காரத்தனத்தையும் வியந்து பாராட்டி, ஆசிரியர் அக்கட்டுரைக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கினார் ! இன்ன பிறரும் அவனைப் பாராட்டினார்கள் !

பி.கு: குட்டிக்கதையை எழுதி முடித்து விட்டு ஏதோ ஒன்று எழுத நினைத்தது மறந்து விட்டதே என்று நினைத்தேன் ! யோசித்தேன், அது இது தான் .... அம்மாணவனின் பெயர் 'அம்பேத்கார்' !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி

27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடும், பொதுவாக குழப்பமும் நிலவும் நிலையில், CNN-IBN தொலைக்காட்சியில் கரண் தபாருடனான ஒரு நேர்முகப் பேட்டியில், மேற்பார்வைக் குழுவின் (Oversight Committee) தலைவர் ஆன வீரப்ப மொய்லி, பின் வருமாறு கூறியுள்ளார்.

1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !

2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.

3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.

4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.

5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.

6. ஆகஸ்டு 31-ஆம் தேதி, மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !

திரு.வீரப்ப மொய்லி கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, "எடுத்தோம், கவுத்தோம்!" என்றில்லாமல், பிற்படுத்தப்பட்டவரில் உண்மையான தேவையிருப்போர் முழுப்பலன் பெறும் வகையில், ஓட்டுக்களுக்காக என்றில்லாமல், யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 10, 2006

பெரியார் பட சர்ச்சை - II

*********************
பெரியார் திரைப்பட சர்ச்சை - I
********************

தற்போது, மற்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. முதலில், எஸ்.வி.சேகர், பெரியார் திரைப்படத்திற்கு அரசு மானியம் வழங்கியது போல, மூதறிஞர் ராஜாஜி பற்றி படம் எடுக்க முன் வந்தால், அரசு மானியம் கிடைக்குமா என்று கேட்டதும், அதைத் தொடர்ந்து, பெரியார் படம் எடுப்பதை சேகர் எதிர்ப்பதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அவர் கூறியது, பெரியார் படத்தை அரசே தயாரித்தால், செலவு குறைவாக இருக்கும் என்பது தான். இப்போது டிராபிக் ராமசாமி என்பவர், அரசு ஒரு தனி நபருக்கு (ஞானசேகரன்) 95 லட்சம் வழங்கியதை எதிர்த்து பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளார். பெரியார் பக்தகோடிகள் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கியதாக நேற்று செய்தி வந்தது.

அரசு இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் ! அதாவது, பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக, தி.க, பா.ம.க ...), கட்சி சார்பாக பெரியார் படம் எடுக்க பண உதவி செய்திருக்கலாம் ! திமுகவும், அதிமுகவும் பணபலம் உள்ள கட்சிகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ! திமுக, சட்டமன்றத்திலேயே, தாங்கள் பெரியார் படத்திற்கு கட்சி சார்பில் பணவுதவி செய்யப் போவதாக அறிவித்திருந்தால், மற்ற
திராவிட வழி வந்த கட்சிகளும் (அதிமுக உட்பட) பெரியார் படமெடுக்க ஏதாவது உதவி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் என்பது என் கருத்து. கட்சித் தலைவர்களையும், அவர்களின் எண்ணப்போக்கையும் மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா ?

மேலும், பெரியார் கொள்கைகளை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் திராவிட கழகம், இப்படத்திற்கு பெரிய அளவில் நிதியுதவி செய்யும் நிலையில் தான் உள்ளது என்பது உண்மை தானே ! கழகக் கண்மணிகள் நிதி வசூலும் செய்யலாமே !

இது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரைப்படப் பெயர்கள் தமிழில்(!) இருந்தால், அப்படங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது, நல்லதொரு கேலிக்கூத்து ! பொதுவாக அரசு வழங்கும் மானியம் மற்றும் சலுகைகளுக்கான முழுப்பலன் திரைப்படத்துறையில் இருக்கும் கடை நிலை தொழிலாளர்களை சென்றடைவதில்லை. கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் மேலும் இதனால் லாபம் அடைகிறார்கள் ! சலுகைகள் என்பவை நல்ல திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இஷ்டத்திற்கு சலுகைகள் அளித்து அரசு தன் நியாயமான வருமானத்தை இழப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

அடுத்து, பெரியார் திரைப்படத்தில் வள்ளியம்மையாக நடிக்க ஜோதிர்மயி என்ற புதுமுக நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரேவதி, கௌதமி போன்ற தேர்ந்த நடிகைகளை (மற்றும் நடிகர்களை) நடிக்க வைத்தால், படத்தின் வெற்றி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக அமையும் என்று நினைக்கிறேன். சத்யராஜ் மட்டுமே படத்திற்கு வெற்றி தேடித் தர இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails